Thursday, July 24, 2014
சாமைக் காரப் புட்டு
சிறுதானிய உணவு வகைகள்
சாமைக் காரப் புட்டு
*******************************
தேவையானவை:
சாமை அரிசி மாவு - 500 கிராம், எண்ணெய் - 3 மேசைக்கரண்டி, கடுகு - சிறிதளவு, உளுந்து - ஒரு தேக்கரண்டி, கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி, சீரகம் - ஒரு தேக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு, கொத்தமல்லி (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு, தக்காளி (பொடியாக நறுக்கியது) - 1, சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 250 கிராம், காய்ந்த மிளகாய் - 4, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
சாமை அரிசி மாவைச் சலித்து, அதனுடன் சீரகம், சிறிது உப்பு கலந்து புட்டு பதத்துக்குப் பிசைந்து, ஐந்து நிமிடங்கள் ஊறவைத்து, ஆவியில் 10 நிமிடங்கள் வேகவிடவும். கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், மிளகாய், தக்காளி, உப்பு முறையே சேர்த்து, நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும். பின், வேகவைத்த சாமைப் புட்டைச் சேர்த்து நன்கு கலக்கவும். கொத்தமல்லியைத் தூவி இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் மூடி வேகவிட்டு எடுக்கவும்.
பலன்கள்:
நீராவியில் வேகவைத்த உணவு என்பதால், உடலுக்கு நல்லது. விரைந்து செரிக்கும் தன்மை கொண்டது. காரம் சேர்ப்பதால், மேலும் சுவை அதிகமாகும்.
முளைக் கட்டிய பாசிப் பயறு இயற்கைக் கொழுக்கட்டை
முளைக் கட்டிய பாசிப் பயறு இயற்கைக் கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்: முளைக்கட்டிய பாசிப் பயறு, துருவிய பச்சை மிளகாய், முள்ளங்கித் துருவல், முட்டைக் கோஸ் துருவல் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லி கறிவேப்பிலை, உப்பு ஆகியவை,
செய்முறை: முளைக்கட்டிய பாசிப் பயற்றை மிக்சியில் அல்லது ஆட்டுக்கல்லில் நன்றாக ஆட்டி எடுத்து மற்ற அனைத்தையும் அதனுடன் ஒன்றாக நன்றாகக் கலக்கி கொழுக்கட்டை வடிவில் பிடித்தால் சரி!
தனியாகச் சாப்பிடலாம். விரும்பும் ஏதாவது ஒரு சட்னியுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
இங்கு தக்காளி கொத்துமல்லிச் சட்னியும் தேங்காய்ச் சட்னியும் உள்ளது....
கொழுக்கட்டையில் சேர்க்கும் காய்கறிகளை நமது விருப்பம்போல மாற்றிக் கொள்ளலாம்.
(சமைக்க நினைத்தால் அப்படியே இட்லித் தட்டில் வைத்து வேகவைத்தால் போதும்)
கம்பு கொழுக்கட்டை
கம்பு வெஜிடபிள் கொழுக்கட்டை : காய்கறிச் சாம்பாருடன்.
தேவையான பொருட்கள்: நான்கு மணி நேரம் ஊறவைத்த கம்பு, நறுக்கிய கேரட், முள்ளங்கி , தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய்த் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லி கறிவேப்பிலை, உப்பு ஆகியவை,
செய்முறை: ஊறவைத்த கம்பை மிக்சியில் நன்றாக உலர் மாவாக அடித்து எடுத்து மற்ற அனைத்தையும் அதனுடன் ஒன்றாக நன்றாகக் கலக்கிக் கொழுக்கட்டை வடிவில் பிடித்து இட்லிப் பாத்திரத்தில் வைத்து வேகவைத்தால் தயார்!
தனியாகச் சாப்பிடலாம். விரும்பும் ஏதாவது ஒரு சட்னியுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
சாம்பாருடனும் சாப்பிடலாம்.
தாளித்த தயிரில் போட்டு தயிர்க் கொழுக்கட்டையாகவும் சாப்பிடலாம்.
இங்கு பாசிப்பருப்பு வெங்காய காய்கறிச் சாம்பார் உள்ளது.
கொழுக்கட்டையிலும் சாம்பாரிலும் சேர்க்கும் காய்கறிகளை நமது விருப்பம்போல மாற்றிக் கொள்ளலாம்.
Wednesday, July 9, 2014
சோளம், ராகி,கம்பு இட்லி
தேவையானவை
ராகி 2 கிளாஸ்
சோளம் 1 கிளாஸ்
கம்பு குருணை 1 கிளாஸ்
இட்லி அரிசி 2 கிளாஸ்
உளுந்து 1 கிளாஸ்
வெந்தியம் சிறிது
ஊற வைக்கும்போது :
ராகி, சோளம் சுத்தம் செய்து தனி தனியாக சுமார் 6 மணி நேரம் ஊற வைக்கவும் .
இட்லி அரிசி , உளுந்து, வெந்தியம் வழக்கம் போல தனி தனியாக ஊற வைக்கவும்.
கம்பு குருணை மட்டும் சுமார் 1 மணி நேரம் ஊறினால் போதும் . (அதிக நேரம் ஊறினால் புளிப்பு ரொம்ப இருக்கும் மாவில்) அரைக்கும் போது :
உளுந்து வெந்தியம் முதலில் .. அரைத்து எடுத்து கொள்ளவும்
அடுத்து 15 நிமிடம் சோளம் , சோளம் 3/4 பதம் அறைந்ததும், ராகி ஒரு 10 நிமிடம் கம்பு 10 நிமிடம் கடைசியாக இட்லி அரிசியும் சேர்த்து அரைத்து வழக்கம் போல உப்பு போட்டு கலந்து மாவை புளிக்க வைத்து இட்லி தயார் செய்யவும்.
அதிக நார் சத்து உடன் கூடிய, சுவையான இட்லி தயார்.
Subscribe to:
Posts (Atom)