Monday, October 19, 2015

கருப்பு உளுந்து லட்டு

.
தேவையான பொருட்கள்:-
கருப்பு உளுந்து ------------------- 1 கப்
பொட்டுகடலை ------------------ 2 டேபிள் ஸ்பூன்
பொடித்த சர்க்கரை ------------- 3/4 கப்
ஏலக்காய் பொடி ----------------- 1/2 டீஸ்பூன்
நெய் தேவையான அளவு.


சிறு துண்டுகளாக நறுக்கிய முந்திரி பருப்பு சிறிதளவு.


செய்முறை:-
முதலில் கருப்பு உளுந்தை கல் நீக்கி சுத்தம் செய்து நன்றாக கழுவி வெயிலில் உலர்த்தி வெறும் வாணலியில் வாசனை வரும் வரை சிவக்க வறுத்தெடுத்து ஆற வைக்கவும்.

வறுத்த பருப்பு நன்கு ஆறியதும் அதனுடன் பொட்டுகடலை சேர்த்து நைசாக பொடித்தெடுத்து சலித்து வைத்துக்கொள்ளவும்.
சலித்தெடுத்த மாவுடன் பொடித்த சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.

ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவிற்கு நெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள முந்திரி பருப்பை போட்டு பொன்னிறமானதும் சர்க்கரை கலந்து வைத்துள்ள லட்டு மாவில் ஊற்றி கரண்டியால் கலந்து விட்டு கை பொறுக்கும் சூடு இருக்கும் போதே விருப்பமான அளவில் லட்டுகளாக பிடித்து வைக்கவும்.
சத்துக்கள் பல நிறைந்த சுவையான இந்த கருப்பு உளுந்து லட்டு சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும்.

முக்கியமாக வளரும் பெண் குழந்தைகளுக்கு இதை அடிக்கடி செய்து கொடுப்பதினால் இடுப்பு எலும்புகள் நல்ல வலுவாக இருக்கும்.

குறிப்பு:- சிறிதளவு பொட்டுகடலை சேர்த்து பொடிப்பதனால் உடையாமல் லட்டு பிடிக்க சுலபமாக இருக்கும்.

நெய்யை காய வைத்து மாவில் ஊற்றும் போது நன்கு நுரைத்துக்கொண்டு வர வேண்டும்.

நெய் மற்றும் சர்க்கரையின் அளவை அவரவர் ருசிக்கேற்ப கூட்டிக்கொள்ளலாம்.

விருப்பப்பட்டால் பாதாம் பருப்பையும் நெயில் வறுத்து சேர்த்துக்கொள்ளலாம்

No comments:

Post a Comment